ஸ்ரீ யதிராஜ வல்லி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பரப்ரஹ்மணே நம:
நம் காழியூர் க்ஷேத்திரத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ எதிராஜ வல்லித் தாயார் இவர்கள் கண்டருளும்படியான உற்சவங்கள் நம் சந்நிதியுடைய நடை முறைகள் இவற்றைக் குறித்து சில விஷயங்கள் இங்கு வெளியிடப் படுகின்றன.
எம்பெருமான் தினப்படியாக காலையில் ஏழரை மணியளவில் விஸ்வரூபம் கண்டருளுகிறார். விஸ்வரூபத்தில் பெருமாள் க்ஷீரம் அமுது செய்தருளுகிறார். அதற்குப் பிறகு பெருமானுக்கு காலை பத்தரை மணியளவில், காலை சந்தி, திருவாராதனம், நடைபெறுகிறது. அப்போது பெருமான் ப்ரஸாதம் அமுது செய்வார். அதற்குப் பிறகு, மாலை வேளையில் எம்பெருமானுக்கு திருவிளக்கு சமர்ப்பித்து, திருமால்வடை, அதாவது ஏதாவது ஒரு ப்ரஸாதம் அமுது செய்வர். மாலை ஏழரை மணியளவில் பெருமானுக்கு சயனம். இவைகள் கிராமமாக நித்தியடி நடைபெற்று வருகிறது.
இது தவிற பக்ஷ, மாச, சம்வத்சரோத்சவங்கள் க்ரமேண நடந்துகொண்டு வருகின்றன. ஒவ்வொரு வெள்ளியன்றும் தாயாருக்கு விசேஷ அலங்காரங்கள், அர்ச்சனை செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தது, ஒவ்வொரு மாதமும் நம் சந்நிதியில் எழுந்தருளி இருக்கும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் இவர்களுடைய திருநக்ஷத்ரங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ரேவதி (பெருமாள்), விசாகம் (நம்மாழ்வார் ) கார்த்திகை (திருமங்கை மன்னன்) பூரம் (ஆண்டாள்) திருவாதிரை (எம்பெருமானார்) மூலம் (மாமுனிகள்) இவர்களுடைய நக்ஷத்திரத்தின் போது அவரவர்களுக்கு அலங்காரம் செய்து, சேவை சாற்றுமறை, மற்றும் ப்ரஸாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொரு மாதமும் நடக்கும்படியான உத்சவங்கள். இவை தவிற, வைகாசி விசாகம் என்ன, கார்த்திகையில் கார்த்திகை என்ன, திருவடிப் பூரம் என்ன, சித்திரையில் திருவாதிரை என்ன, ஐப்பசியில் திருமூலம் என்ன, இந்த நாட்களில் விசேஷமாய் உத்சவங்கள்/சாற்றுமறை கொண்டாடப்பட்டு வருகின்றன. இவற்றில் திருவாடிப்பூர உத்சவம் விசேஷமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
• சித்தரை மாசம் ப்ரஹ்மோத்சவத்துக்குத் துல்யமாக நடை பெறுவது சித்திரை ரேவதி உத்சவம். இந்த உத்சவம் சௌகர்யானுகுணமாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அருளிச்செயல் கோஷ்டி பூர்ணமாக நடைபெறும். அது தவிற, தாயார் சந்நிதியில் தாயாருக்கும், பெருமாளுக்கும், மற்றும் உண்டான கண்ணன், சக்கரத்தாழவார், ஆண்டாள் இவர்களுக்கும் திருமஞ்சனம் நடைபெறும். மேலும் பலவிதமான பிரசாதங்கள் திருப்பணியாரங்கள், இவைகளை எம்பெருமான் திருவமுது செய்வார். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். நம்மூரைச் சேர்ந்த பலர் (உள்நாடு வெளிநாடு உட்பட) இங்கு வந்து எம்பெருமானுடைய ஸ்ரீ யதிராஜ வல்லி தாயாருடைய அருளுக்கு இலக்காவார்கள்.
• வைகாசி மாதத்தில் நம்மாழ்வாருடைய சாற்றுமறை. அப்போதும் அருளிச்செயல் கோஷ்டி விசேஷமாய் நடை பெரும்.
• புரட்டாசி மாதம், தாயாருக்கு நவராத்ரி உத்சவம் நடைபெறும்படியாய் அமைந்திருக்கிறது. ஊஞ்சல் உத்சவம், திருவிளக்கு பூஜை அன்றைய விசேஷங்கள்.
• கார்த்திகையில் கார்த்திகை, திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை. திருக்கார்த்திகை உத்சவத்துக்கு, விசேஷமாய் தீபங்கள் ஏற்றப்பட்டு, தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டு, ஊருக்கே வெளிச்சம் தரும் விதத்தில் பிரகாசமாய் இருக்கும்.
• மார்கழி மாதம் அனைவரும் எதிர்பார்க்கும் தனுர் மாசம். விடி காலையிலேயே பெருமானுக்கு திருவாராதனம் நடை பெற்று, அந்தந்த நாளுக்கு உண்டான பிரசாதங்களை, எம்பெருமான் அமுது செய்வார். ஊரிலுள்ளோர் அனைவரும் வந்து பெருமாளை சேவித்து, பிரசாதம் ஸ்வீகரித்து, அவன் அருள் பெற்று செல்வார்கள். இது தவிற போகி அன்று, ஆண்டாளுக்கு பெருமானுக்குமாக திருக்கல்யாணம் நடைபெரும்படியாக அமைந்திருக்கிறது.
• அடுத்தது தை மாதம் ஷங்கராந்தியன்று, பெருமானுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
• பங்குனி உத்திரம் உத்சவமும் விசேஷமாய் கொண்டாடப்பட்டு வருகின்றது. வைகுண்ட ஏகாதசியன்று எம்பெருமான் தசமி மாலை சமர்ப்பித்துக் கொண்டு கண்ணெச்சில் பெருமளவுக்கு விசேஷமாய் சேவை சாதிப்பார்.
இப்படி நித்ய, பக்ஷ மாச சம்வத்சர உத்சவங்களைக் கண்டருளும் எம்பெருமான், வெளியூரிலிருந்து அவ்வப்போது வந்து, சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, பிரசாதம் சமர்ப்பித்து எம்பெருமான் அருளுக்குப் பாத்திரமாய் இருக்கும் பலரைக்கண்டு, சந்தோஷப்படுவார். வாஸ்தவத்தில், நம் குழந்தைகள் வருவார்களா என்று தினமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். தேசாந்திரத்திலிருந்து குழந்தைகள் வந்தால் பெற்றோர் எப்படி சந்தோஷிப்பார்களோ, அப்படி சந்தோஷப்படுவார்கள் நம் எதிராஜ வல்லிதாயாரும், ஆதிகேசவாப் பெருமாளும். எனவே, நாம் அனைவரும் வருடம் இரண்டு அல்லது மூன்று முறை கோவிலுக்கு வந்து, எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து அவன் அனுகிரஹத்தை. பெறுவோமாக.